தினகரன் நாளிதழ் – விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் மாணவர்கள் திரளாக பங்கேற்பு: விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்

 

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரண்டுநாள் கல்விக் கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் பெற்ற நிலையில், குழப்பங்களை நிவர்த்தி செய்ய உதவியது என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ததாகவும் உற்சாகத்துடன் கூறினர்.

பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன படிக்கலாம். எந்தக் கல்லூரியில் சேரலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஒவ்வோர் ஆண்டும் தினகரன் நாளிதழ் சார்பில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரமாண்ட கல்விக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டும், தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

தொடக்க விழாவிற்குத் தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில், விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் டாக்டர் ஆர்.ரகு, பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துணை தலைவர் ஆர்.எம்.சுரேஷ், சென்னை அமிர்தா குரூப் தலைவர் பூமிநாதன், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரெசென்ட் இன்ஸ்டியூட் ரிஜிஸ்டார் ராஜா உசேன், தனலட்சுமி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சேர்மன் வி.பி.ராமமூர்த்தி, ரெமோ குரூப் ஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் டைரக்டர் ரித்திக் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்களது அரங்குகளை அமைத்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரிகளின் அரங்குகளை மாணவர்கள், பெற்றோருடன் பார்வையிட்டு விளக்கம் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரங்குகளில் இருந்த பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், அயல்நாட்டுக் கல்வி, நர்சிங், ஊடகம், ஹோட்டல் மேலாண்மை, கட்டிடக் கலை, புகைப்படக் கல்வி, வர்த்தகக் கல்வி, கடல்சார் கல்வி, அழகுக் கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு, விமானப் பணி, ட்ரோன் தொடர்பான படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும், வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான வழி காட்டுதல்கள், அவர்களுக்கான ஊக்கத்தொகைகள் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. இது தவிர கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், ஊக்கத் தொகை பெறுவது எப்படி, கட்டணச் சலுகைகள் பெறுவது எப்படி உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்கள் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டது. மேலும், பெற்றோர்களுக்கும் முறையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. கண்காட்சிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான மாணவ மாணவிகள் தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என ஆர்வமுடன் ஆலோசனைகள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். மேலும், அவர்களுக்குத் தேவையான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்தக் கண்காட்சி மூலம் கல்லூரியில் சேர்பவர்களுக்குக் கல்லூரிகள் சார்பில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது தொடர்பாகத் தங்களுக்கு இருந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இருந்ததாக மாணவ மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

* பெற்றோர் – மாணவர் சேர்ந்து முடிவெடுக்கும் வகையில் பெரும் பயனளித்த கல்விக் கண்காட்சி: விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் கூறியதாவது:

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தினகரன் கல்வி மற்றும் விஐடி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கல்விக் கண்காட்சியில் எல்லா கல்வி நிறுவனங்களின் வசதிகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. இன்றைக்கு கல்லூரிகளில் உல்ள வசதிகள் எல்லாவற்றையும் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் இங்கு கலந்து கொண்டுள்ளன. முன்பு பெற்றோர் தங்கள் குழந்தைகள் எந்தப் படிப்பில் சேர வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஆனால் தற்போது அது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான ஒரு ஆரோக்கியமான விவாதமாக மாறி உள்ளது. எந்த படிப்பில் சேர்ந்தால் அடுத்து நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆலோசிக்கிறார்கள். மாணவர்களுக்கும் சில படிப்புகளைப் படிக்க ஆர்வம் உள்ளதால் பெற்றோர் அவர்களை தற்போது வற்புறுத்துவதில்லை. மாணவர்களுடன் சேர்ந்து முடிவு செய்வதற்கு இந்தக் கல்விக் கண்காட்சி உதவியாக இருக்கும். அதேபோல், விஐடி கல்வி நிறுவனம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.

கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் கற்பித்தல், படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. மாணவர்கள் தங்கள் படிப்பு மட்டுமல்லாமல், அவர்களின் தனித் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையிலும் விஐடி கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறினார்

Related Stories: