சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கிறிஸ்துவ அமைப்புகளின் பேராயர்கள் சந்திப்பு: திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்

 

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் பேராயர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், ரோமன் கத்தோலிக்க இறைச்சபை, தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ), இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை, தமிழ்நாடு ஆயர் பேரவை (ரோமன் கத்தோலிக்கம்), ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, ஜீசஸ் கால்ஸ் அமைப்பு, ஏ.ஜி.திருச்சபை, இந்திய நற்செய்தி திருச்சபை,

சிரியோ-மலபார் கத்தோலிக்க திருசசபை, ஈயேசு மீட்கிறார் அமைப்பு, தமிழ் சுவிசேஷலூத்தரன் தேவாலயம், இரும்புலியுர் பெந்தேகோஸ்தே மிஷன் ஆகிய கிறிஸ்துவ அமைப்புகளின் பேராயர், முன்னாள் பேராயர் மற்றும் நிர்வாகிகள் என 40க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து கிறிஸ்துவ சொத்துகள் மற்றும் தேவாலாயங்களை அழிக்கக் கூடிய “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா2026”-வை எதிர்த்து முதலாவது நபராக குரல் கொடுத்து, தொடர்ந்து அம்மசோதாவை திரும்ப வேண்டுமென்று வலியுறுத்தி வருவதற்காக நன்றி தெரிவித்தனர்.

அதுசமயம் சிறுபான்மையினர் நலனுக்காக கலைஞர் காலத்திலிருந்தே பாடுபட்டு வரும் திமுகவை தலைமையேற்று வழிநடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி பாராட்டினை தெரிவித்ததோடு, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தோளோடு தோளாக, அத்துணை கிறிஸ்துவ அமைப்புகளும் கிறிஸ்துவ மக்களும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, அவர்கள் வெற்றிபெற உறுதுணையாக இருந்து செயலாற்றி, மதவாத கட்சியான பாஜக கூட்டணியை தோற்கடிப்போம் என்று உறுதி பூண்டனர்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு கருஞ்சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றி, மறுசீரமைப்பு திருத்தச் சட்ட நகலை எரித்து, இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து, பாசிச பாஜக அரசு கொண்டு வந்த “தொகுதி மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை” பாராளுமன்றத்தில் தோற்கடித்தைப் போலவே, கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் இந்த “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா 2026-வினையும் பாராளுமன்றத்தில் தோற்கடித்திட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உடனிருந்தார்.

Related Stories: