புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமித்ஷா உறுதி அளித்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டுக்கு 6 எம்.பி தொகுதிகள் பறிபோகும் என்று மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது குறுக்கிட்டு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்பது செயல்முறையை பற்றியது அல்ல, மாறாக நோக்கத்தை பற்றியது ஆகும். அவர்கள்(எதிர்க்கட்சிகள்) பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற கருத்தையே எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அமலாக்கத்தை எதிர்க்கவில்லை, மாறாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன என்பதை இந்த அவைக்கு உணர்த்துவது எனது பொறுப்பு.
குதி மறுவரையறையை எதிர்ப்பவர்கள், தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களின் அதிகரிப்பையும் எதிர்க்கிறார்கள். 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட 120-க்கும் மேற்பட்ட தொகுதிகள் இருக்கின்றன.சில தொகுதிகளில் 39 முதல் 48 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியைப் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்துவது கடினமாகிறது.
நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறைப் பணியுடன் இட ஒதுக்கீடு இணைக்கப்பட்டு, 2029 பொதுத் தேர்தலுக்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது. 1976-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. அதன் பின்னர் மக்களவை இடங்களின் எண்ணிக்கை மாறாமல் இருந்து வருகிறது.
தென் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் போலவே அதே உரிமைகளும் அதிகாரங்களும் உள்ளன. லட்சத்தீவு போன்ற சிறிய பிராந்தியங்கள் கூட மக்களவையில் சமமான அந்தஸ்தைக் கொண்டுள்ளன. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்த அவை வடக்கு மற்றும் தெற்கு என்ற அடிப்படையில் பிளவுபடக்கூடாது. நாம் இதுபோன்ற அரசியலுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்.
தமிழ்நாட்டில் இப்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. திமுகவின் கோரிக்கையின்படி தற்போது உள்ள 543 இடங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 13 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு 26 இடங்கள் மட்டுமே பொதுவான இடங்களாக இருக்கும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை செய்தால் தமிழ்நாடு உண்மையில் 6 இடங்களை இழக்கும்.
ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் இடங்களை 50% அதிகரித்து வருகிறோம். இது தமிழ்நாட்டிற்கு மேலும் 20 இடங்களைச் சேர்க்கும் . இதன் விளைவாக 39 பொது இடங்களும் 20 தனித் தொகுதிகளும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு குரல் எழுப்பிய நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருருமான எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவு குரல் எழுப்பினார். அதோடு, தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், மக்களவையில், தமிழ்நாட்டுக்கு 6 எம்.பி. தொகுதிகள் குறையும் அபாயம் உள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
