பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய, அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா, அரசியலமைப்பு மீதான ஒரு தாக்குதல். அதனை எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளன என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பிரதமர் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர் 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
அதற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கும். நான் முன்பே கூறியது போல, இது அரசியலமைப்பு மீதான ஒரு தாக்குதல். அதனை நாங்கள் முறியடித்துவிட்டோம். இது பெண்களுக்கான மசோதா அல்ல என்றும், இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றும் நாங்கள் தெளிவாகக் கூறினோம்; அந்த முயற்சியை நாங்கள் தடுத்து நிறுத்திவிட்டோம்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்பினால், அவர் 2023ஆம் ஆண்டு சட்டத்தைக் கொண்டுவந்து, அதனை இன்றிலிருந்தே அமல்படுத்த வேண்டும். முழு எதிர்க்கட்சியும் உங்களுக்கு ஆதரவளித்து, இன்றிலிருந்தே பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும்’ என்றார்.
பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,’இந்தத் திருத்த மசோதா தோல்வியடைந்துவிட்டது. அரசியலமைப்பைச் சிதைப்பதற்காக, பெண்கள் என்ற பெயரில் அவர்கள் ஒரு அரசியலமைப்புக்கு முரணான தந்திரத்தைப் பயன்படுத்தினர். இந்தியா இதனைப் பார்த்தது. இந்தியா கூட்டணி இதனைத் தடுத்து நிறுத்தியது. அரசியலமைப்பு வாழ்க’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
