×

உங்கள் பிரார்த்தனையே என் வலிமை: மருத்துவமனையில் இருந்து வானதி வீடியோ வெளியிட்டு உருக்கம்

கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன். இவர், கடந்த 11ம் தேதி திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது மகன் ஆதர்ஷ் மற்றும் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜ கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்காக தொகுதியில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடி வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், அன்பு சகோதர, சகோதரிகளே உங்களது அன்பினாலும், பிரார்த்தனையாலும் விரைவாக உடல் நலம் தேறி கொண்டிருக்கிறேன். ஓரிரு நாட்களில் நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன்.

தொகுதியில் தீவிரமாக பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு எனது நன்றி. பிரதமர் மோடி எனது பூத் வலிமையான பூத் என்ற கலந்துரையாடலில் பங்கேற்கிறார். இதில், அவருடன் பேசுவது, அவர் பேசுவதை கேட்டு நிகழ்வை வெற்றிகரமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், தனது எக்ஸ் தளத்தில், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும், மனமார்ந்த நன்றி. என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது. உங்கள் பிரார்த்தனையே என் வலிமை. உங்கள் நம்பிக்கையே என் மருந்து. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன். மீண்டும் சந்திப்போம் என கூறி உள்ளார்.

* சொல்லாததையும் செயல்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: துரை வைகோ பெருமிதம்
கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி கடையநல்லூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சொன்னதையும் தாண்டி சொல்லாத திட்டங்களையும் முதல்வர் செய்துள்ளார். ரூ.12 லட்சத்து 37 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதற்காக 1127 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல நாடுகளுக்கு முதல்வர் சென்று முதலீட்டை பெற்றார். இது வெறும் கண்துடைப்பு என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், முதலீட்டை ஈர்த்தது தொடர்பாக ஆதாரங்களுடன் முதல்வர் தெரிவித்தார். எனவே மீண்டும் திமுக தலைமையில் நல்ல அரசு தொடர வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vanathi ,Coimbatore North ,BJP ,Vanathi Srinivasan ,Coimbatore ,Adarsh ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...