×

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்க தேவையில்லை: அதிமுகவினருக்கு எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் பொய் தகவல்களைப் பரப்பி, தமிழக மக்களையும் நம் கட்சி தொண்டர்களையும் திசை திருப்பும் வேலையை திட்டமிட்டு செய்து வருகின்றனர். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்க தேவையில்லை. 2011 ஏப்ரல் மாதம் 13ம் தேதி சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அச்சமயம் சில கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி தொடரும் என்றது; சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன. அதுகுறித்து அம்மாவிடம் ஊடகங்கள் கேள்வி கேட்டபோது, “218 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம்’’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.

சொன்னபடியே அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்று, அம்மா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். 2016லும் இதேபோன்று கருத்துக் கணிப்பு பொய்யானது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக் கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் நம் கழகத்தின் தனித் தன்மை. இந்தத் தேர்தலிலும் அத்தகைய வெற்றி கண்டிப்பாக தொடரும். அதிமுக 210 தொகுதிகளில் உறுதியாக வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே, 4ம் தேதி தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் நம் அதிமுக தொண்டர்கள், பூத் ஏஜெண்ட்டுகள், வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சி நிச்சயம் மலரும். அதிமுக வின்னிங். நல்லாட்சி கம்மிங். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi ,AIADMK ,Chennai ,General Secretary ,Edappadi K. Palaniswami ,Tamil Nadu ,
× RELATED எங்கள் கட்சி ஒற்றுமை, அனைவரையும்...