×

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது அப்பட்டமான பொய்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது அப்பட்டமான பொய் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பாஜ அரசு, தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகையால், நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அப்படி பெருகும் காரணத்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகிறதாம். அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஊக்கத் தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டுமாம். என்ன கொடுமை பாருங்கள்.

மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்றார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தக் கண்டனத்தை தொடர்ந்து, நெல்லுக்கான ஊக்கத்தொகை நிறுத்த உத்தரவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன், வெளியிட்ட பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது.

கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Union Minister ,Nirmala Sitharaman ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Union Minister Nirmala Sitharaman ,Thanjavur ,BJP government ,Tamil Nadu government ,Tamil Nadu government… ,
× RELATED ஹைதியில் உள்ள பிரபலமான ஒரு மலை உச்சிக்...