×

காஞ்சிபுரம் வாகன சோதனையில் லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கி வைத்திருந்த சிஐஎஸ்எப் வீரர் கைது

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமாக, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதுடன் நிலை கண்காணிப்பு குழுவினரும் பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை முதல் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே கீழம்பி வாகன சோதனைச் சாவடி அருகே நேற்றிரவு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மகாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், காரில் வந்த சிண்டே விகாஸ் நந்தகுமார் (42) காலாவதியான கைத்துப்பாக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அவரை கைத்துப்பாக்கியுடன் பாலுசெட்டி சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிஎஸ்ஐஎப் படை பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றதாகவும், தற்போது அவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சிஐஎஸ்எப்பின் தீயணைப்பு பிரிவில் ஒரு வருடமாக பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 10 மாத காலமாக உரிமம் பெறாமல் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வுபெற்ற சிஐஎஸ்எப் வீரரை கைது செய்து, காலாவதியான கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இரவோடு இரவாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : CISF ,Kanchipuram ,Tamil Nadu ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்...