100% வாக்குப்பதிவு இலக்கு அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்; மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா பேச்சு

ராணிப்பேட்டை, ஏப்.13: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரகலா பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் தங்களது வாக்குகள் பதிவுகள் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று அதிகாலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 1400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரகலா கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களுடைய வாக்கை தவறாமல் பதிவு செய்யவேண்டும். 5 வருடத்திற்கு ஒருமுறை வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் பங்கேற்கவேண்டும். அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு கலெக்டர் சந்திரகலா பேசினார். இந்த மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் முன்னதாக பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மாரத்தான் ஓட்டம் முத்துக்கடை வழியாக நவல்பூர், உழவர் சந்தை, ராஜேஸ்வரி திரையரங்கம் சாலை, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கீழ் சென்று மீண்டும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. மொத்தமாக 5கி.மீ அளவில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்டஇயக்குனர் செந்தில்குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், ராணிப்பேட்டை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க தலைவர் புனிதவேல், செயலாளர் முரளி, பொருளாளர் சண்முகநாதன், துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) செந்தில்குமார், உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: