விடைத்தாள்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்ய வேண்டும் முகாம் அலுவலர்களுக்கு உத்தரவு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்போது முழு மதிப்பெண்கள் பெறும்

வேலூர், ஏப்.11: தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போது முழு மதிப்பெண்கள் பெறும் விடைத்தாள்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்ய வேண்டும் என்று முகாம் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. நடப்பாண்டு தமிழகம் முழுவதும் 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தொடர்ந்து கல்வி மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் முகாம் அலுவலர்கள், உதவி தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் என ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போது சென்டம் பெறும் விடைத்தாள்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்ய வேண்டும் என்று முகாம் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 (அரியர்) பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடர்பாக அனைத்து முகாம் அலுவலர்களுக்கும். கடந்த மாதம் நடைபெற்ற மண்டல, முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் மதிப்பீட்டுப் பணி தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள வேண்டும். மண்டல, முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் மதிப்பீட்டு பணியின் போது முழு மதிப்பெண்கள் (சென்டம்) பெறும் தேர்வர்களின் விடைத்தாள்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, அனைத்து முகாம் அலுவலர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ் வேர்டை பயன்படுத்தி, முழுமதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களது பட்டியலை பதிவிறக்கம் செய்து, முகாம் அலுவலர்கள் உரிய சரி பார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: