மாநகரில் 100 டிகிரிக்கு மேல் ெவப்பநிலை போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

ஈரோடு, ஏப்.13: ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வருவதால் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. மதிய நேரத்தில் அனல்காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுவாக, கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கூழ், மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை பருகி வருகின்றனர்.

இதற்கிடையே ஈரோடு மாநகரில் கலெக்டர் அலுவலக சிக்னல், பன்னீர்செல்வம் பார்க் சிக்னல், காளைமாடு சிலை சிக்னல் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சிகப்பு சிக்னல் விழும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நின்று விட்டு, பச்சை சிக்னல் விழுந்ததும் புறப்பட்டு செல்வார்கள். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிக்னலில் குறிப்பிட்ட நிமிடம் நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: