வாஷிங்டன்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தானில் நடைபெற்ற உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 1979ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் நேரடியாக ஒரு மேஜையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் நடைபெற்றது. பாகிஸ்தான் முன்னிலையில் நேற்றும் இன்றும் சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனைகள் நீடித்தன.
அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். ஈரானிய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். ஆனால் இரு தரப்புக்கும் இடையே கொள்கை ரீதியாக பெரும் இடைவெளி இருந்ததால், உடன்பாடு எட்டுவதில் சிக்கல் நீடித்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 7.08 மணிக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குழுவினருடன் ஏர்ஃபோர்ஸ் டூ விமானத்தில் ஏறி வாஷிங்டன் புறப்பட்டார். இதன் மூலம் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தோல்வியில் முடிந்தது உறுதியானது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘உலகிலேயே மிகச்சிறந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கப்பல்களில் ஏற்றி தயார் நிலையில் வைத்துள்ளோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அந்த ஆயுதங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவோம். அவர்கள் ஒப்பந்தம் செய்கிறார்களோ இல்லையோ, அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை நாங்கள் வெற்றி பெறுவோம். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்கனவே எங்களது கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் நான் 99 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்க முழுமையாக தயாராகிவிட்டோம்’ என்று டொனால்டு டிரம்ப் கூறினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியால் வளைகுடா பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் அங்கு உச்சக்கட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
