தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி மதுமிதா (27). இருவரும் 9 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அபிமன்யு, தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விஜி, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வாரத்தில் 2 நாட்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாகும். இந்நிலையில் விஜி, மனைவியிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது பெரும்பாலும் அவரது போன் ‘பிஸி’ என காட்டியுள்ளது.
நேற்று முன்தினமும் அதேபோல ‘பிஸி’ என வந்துள்ளது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மனைவி மதுமிதாவை தொடர்பு கொண்டு, ‘ஏன் உன் போன் அடிக்கடி பிசி என்று வருகிறது. நான் நேரில் வீட்டுக்கு வருகிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மதுமிதா வீட்டில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
