சென்னை: மருத்துவ காரணங்களுக்காக நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, நீதிமன்ற உத்தரவை மீறி, போலீசுக்கு சவால் விட்டதால், சித்தூரில் உள்ள லாட்ஜில் பதுங்கி இருந்த யூடியூபர் சங்கர், அவரது தோழி மாலதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் வழியில் தேநீர் குடிக்க வாகனத்தை நிறுத்திய போது, அவருடன் வந்த தோழி மாலதி, கார் டிரைவர் உள்பட 4 பேர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியால் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘ரெட் அண்ட் பாலோவ்’ திரைப்படத்தை வெளியிட்டார். அந்த திரைப்படத்தை யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் அவதூறாக பதிவிட்டுள்ளார். அது குறித்து தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா, யுடியூபர் சங்கரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தவறுதலாக அவர் பதிவிட்ட படம் சம்மந்தமான விஷயங்களை நீக்க கோரிய போது ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி சங்கர் அவரது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.
அதன்படி மகேஷ் ரம்யா கடந்த ஜூன் 30ம் தேதி அவரது அலுவலகத்திற்கு சென்ற போது, மீண்டும் படத்தை பற்றி தரக்குறைவாக பேசாமல் இருக்க தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உன்னுடைய படம் வெளிவராமல் இருக்க நான் வீடியோ வெளியிடுவேன் என்று யூடியூபர் சங்கர் மிரட்டியுள்ளார். தயாரிப்பாளர், தன்னிடம் ரூ.1 லட்சம் தான் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு சங்கர் ‘நான் என்ன பிச்சைக்காரனா’ என்று கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி உயிர் நாடியில் எட்டி உதைத்துள்ளார்.
அப்போது சங்கருடன் மாலதியும், அடையாளம் காட்டக்கூடிய 4 நபர்களும், படத்தின் இயக்குநரையும் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா கடந்த ஜூன் 1ம் தேதி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் யூடியூபர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து டிசம்பர் 16ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் 2வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுப்படி 14 நாட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், யூடியூபர் சங்கருக்கு நிபந்தனையுடன் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குறிப்பாக, சங்கர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்து சமூக ஊடகங்கள் அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது.
வழக்கு தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மிரட்டல் விடுக்க கூடாது. இந்த நிபந்தனைகள் எதையாவது மீறினால் இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த யூடியூபர் சங்கர், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக பேசினார். சென்னை காவல்துறைக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று யூடியூபர் சங்கர் தனது தோழி மாலதியுடன் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தலைமறைவானார். இதுகுறித்து ரகசிய தகவலின் படி சென்னை போலீசார் சித்தூர் ெசன்று லாட்ஜில் விசாரணை நடத்தினர். அப்போது லாட்ஜ் வரவேற்பாளர், போலீசார் வந்த தகவலை யூடியூபர் சங்கருக்கு தெரிவித்துள்ளார். உடனே சங்கர் தனது தோழி, கார் டிரைவர் உட்பட 4 பேருடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
உடனே போலீசார் சங்கரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சங்கரை போலீசார் சென்னைக்கு சாலை மார்க்கமாக அழைத்து வந்தனர். அப்போது சங்கருடன் இருந்த அவரது தோழி மாலதி, கார் டிரைவர் உட்பட 4 பேர் போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து வந்துள்ளனர். சென்னை அருகே போலீசார் வாகனத்தை நிறுத்தி தேநீர் குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த சங்கர் தோழி மாலதி, அவரது கார் டிரைவர் உட்பட 4 பேர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் போலீசார் சிலர் காயமடைந்தனர். உடனே போலீசார் அவர்கள் வாகனத்தை 35 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து மடக்கி பிடித்து மாலதி, அவரது கார் டிரைவர் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
