சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பம் மற்றும் வெயிலின் அளவு அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கரூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்துள்ளது. திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 36 மி.மீ மழை நேற்று பெய்துள்ளது. வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. ஒருசில இடங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், வளி மண்டல காற்றழுத்த பாதையால் தென் தமிழகம், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்துள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 10ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
13, 14ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் இன்று வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருந்தாலும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
