கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தில் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்பதை விசிக சார்பில் வழிமொழிகிறேன். தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி. இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. நமது கூட்டணி பலம், வலுவான அணி, எண்ணிக்கையால் மட்டுமல்ல மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரவேற்கத்தக்க மகத்தான கூட்டணி என்பதுதான்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு களத்தில் இருக்கக்கூடியது திமுக தலைமையிலான கூட்டணி. மற்றொன்று அதிமுக தலைமையா? அல்லது பாஜ தலைமையா? என்று தெரியவில்லை. அதிமுக கூட்டணி என்று யாரும் சொல்லவில்லை, என்டிஏ கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். அதிமுகவுக்கு போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் பாஜவுக்கு போடுவதாக அமையும், மதவெறி சக்திகளுக்கு போடுவதாக இருக்கும். அதிமுக தனித்து இயங்குகின்ற வலிமையை இழந்துள்ளது. அதிமுக-பாஜ தலைமையிலான சங்பரிவார் சக்திகளை தமிழகத்தில் காலூன்ற விடாமல் விரட்டியடிப்போம். திமுக கூட்டணியை மீண்டும் சட்டசபைக்கு அனுப்ப விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
