எதிர் கூட்டணியில் உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள்: கனிமொழி எம்பி பேச்சு

சென்னை,: எதிர் கூட்டணியில் உள்ளவர்கள், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் என்று திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பேசினார். திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து, கனகம்மாசத்திரத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் திமுகவிற்கும் டெல்லிக்குமான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்குமான தேர்தல் என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர் கூட்டணியில் உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள். ஒன்றிய அரசு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக திட்டங்களை கொண்டு வந்தவர்கள். 100 நாள் வேலைக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தியதோடு இன்று 100 நாள் வேலை திட்டத்தையும் நிறுத்தி விட்ட பாஜவோடு கைகோர்த்து நிற்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து எந்த கேள்வியும் கேட்க மாட்டார்.

திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது என்று குற்றம் சாட்டினார்கள். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடந்த குற்றங்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 852 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக குறைக்கப்பட்டு, 2 லட்சத்து 3 ஆயிரத்து 804 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி மிக மோசமான ஆட்சியை நடத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடியவர்கள் நம் எதிர் அணியில் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாதனைகளை செய்து விட்டு தான் தற்போது உங்களிடம் வாக்குகளை கேட்டு வந்துள்ளோம். உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று சொன்ன நமது முதலமைச்சர் கொடுத்துள்ளார். அடுத்த முறை நமது ஆட்சி தான் வரும். அப்போது நிச்சயம் உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தருவார். அதிமுக ஆட்சியில் செல்போன் தருவதாக சொன்னார்கள். ஆனால் யாருக்கும் தரவில்லை. தற்போது பிரிட்ஜ் தருகிறேன், வாஷிங் மெஷின் தருகிறேன் என்று அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் திமுக சார்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் தருகிறேன் என்றும், அதற்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருப்பதால் நீங்கள் விருப்பப்பட்டதை வாங்கிக் கொள்ளுங்கள். மேலும், கலைஞர் ஆட்சியில் இலவச மின்சாரம் வழங்கியதுபோல் அடுத்த நமது ஆட்சியில் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் மின்மோட்டார் பொருத்தப்படாத புதிய பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆயிரத்திலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இளைஞர்கள், இளம் பெண்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். அப்போது அவர்களுக்கும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: