சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமுக்கு கூட்டணி கட்சியான பாஜ ஒத்துழைக்கவில்லை என அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டினர். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் காலை மாலை என இரு வேளைகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆதி ராஜாராம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகம் சார்பில் டி.செல்வம் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த அதே நாள் மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அவருடைய பிரசாரத்தில் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் வெளி மாவட்டங்களுக்குச் சென்றாலும், அவருக்காக கட்சி நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த தொகுதியில் அதிமுக – பாஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு பாஜ தரப்பில் முறையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று அதிமுக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தேர்தல் பணிகள் (துண்டுபிரசுரம் வழங்குதல், வாக்கு சேகரிப்பு, கூட்டங்கள் நடத்துதல் போன்றவை) எதை எடுத்தாலும், தொகுதி நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் பணம் கேட்பதாகவும் அவர்கள் புகார் அளிக்கின்றனர்.
இதுதொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
அதிமுக – பாஜ கூட்டணியில் மேலிடத்தில் தலைவர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். ஆனால் கீழ்மட்டத்தில், குறிப்பாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அதிமுக வேட்பாளருக்கு பாஜ நிர்வாகிகளும் தொண்டர்களும் முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. துண்டுபிரசுரம் வழங்குதல், வாக்கு சேகரிப்பு, கூட்டங்கள் நடத்துதல் என எந்த தேர்தல் பணியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் ‘பணம் பணம்’ என்று எங்களிடம் கேட்கிறார்கள். இதனால் எங்கள் வெற்றி பாதிக்கப்படாது என்றாலும், கூட்டணிக்காக அவர்கள் உழைக்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த புகார்களை அதிமுக மேலிடம் உடனடியாக கவனத்தில் கொண்டு, பாஜவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
