×

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை தொடர்ந்து பொது சிவில் சட்டம், ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்டம்: காணொலியில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதில் தனது ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பாஜகவின் 47ம் ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகளிடையே பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த 1994ம் ஆண்டிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்தது.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது நம்முடைய அரசின் மிகப்பெரிய சாதனையாகும். தற்போது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக உள்ளோம். இந்த சட்டம் வரும் 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்ய முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் நமது இலக்கு திட்டங்களாகும். இவை குறித்து தற்போது நாடு முழுவதும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நம்முடைய இந்த லட்சிய பயணம் தொடர்ந்து நடைபெறும்’ என்று பிரதமர் மோடி கூறினார். வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதுதொடர்பான முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags : Modi ,New Delhi ,Union government ,BJP ,47th Foundation Day ,
× RELATED சினிமா பாடலில் பெண்களை அவமதிக்கும்...