×

இந்தியாவின் கனவுத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கல்பாக்கம் அதிநவீன அணு உலையில் வரலாற்று சாதனை: விஞ்ஞானிகள் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிநவீன அணு உலையில் அணுக்கரு பிளவு தொடர் வினையை வெற்றிகரமாக தொடங்கி இந்தியா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பாரதிய நபிகிய வித்யுத் நிகாம் லிமிடெட் (பவினி) நிறுவனம் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணு உலை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது வழக்கமான அணு உலைகளை விட முற்றிலும் மாறுபட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அணு உலையை அமைப்பதற்கான பணிகள் பல்வேறு தொழில்நுட்ப சவால்களுக்கு இடையே நடந்து வந்தன. அணுசக்தி துறையில் இந்தியாவின் நீண்டகால திட்டம் மற்றும் கனவுத் திட்டமான 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன ‘புரோட்டோடைப் பாஸ்ட் பிரீடர்’ அணு உலை (பி.எப்.பி.ஆர்.), கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முக்கிய மைல்கல்லை நாடு நேற்று எட்டியது. இந்த அணு உலையில் அணுக்கரு பிளவு தொடர் வினை தன்னிச்சையாக நிகழும் நிலையை (கிரிட்டிக்காலிட்டி) எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் அளவை விட அதிக அளவிலான எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த மகத்தான சாதனையை அறிவித்த பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் இன்று வலிமையான அடியை எடுத்து வைத்துள்ளோம். கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன அணு உலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சாதனையானது நமது விஞ்ஞானிகளின் ஆழ்ந்த திறமையையும், பொறியியல் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் தோரியம் இருப்பை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கான முக்கிய படியாக இருக்கும். இந்த சாதனை இந்தியாவிற்கு பெருமையான தருணம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தி துறை செயலாளருமான டாக்டர் அஜித் குமார் மொஹந்தி கூறுகையில், ‘இந்தியாவின் அமைதி வழி அணுசக்தி திட்டத்தில் தற்போதைய சாதனையானது வரலாற்று மைல்கல். ஹோமி ஜஹாங்கீர் பாபா கனவு கண்ட மூன்று அடுக்கு அணுசக்தி திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் இந்தியா தற்போது நுழைந்துள்ளது. இந்த அணு உலை தான் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

வரும் 2070ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய உதவும். இதில் உருவாகும் கழிவு எரிபொருள் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். இது மூன்றாவது கட்டத்தில் நமது நாட்டில் அபரிமிதமாக உள்ள தோரியத்தை பயன்படுத்த வழிவகுக்கும்’ என்று தெரிவித்தார். உலக அளவில் ரஷ்யா மட்டுமே இத்தகைய அணு உலையை வணிக ரீதியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. வரும் 2047ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தியை எட்டும் இந்தியாவின் இலக்கிற்கு இந்த சாதனை பெரும் வலுசேர்த்துள்ளது. இந்த உலை முழுமையாக செயல்படத் தொடங்கும்போது, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kalpakkam ,India ,PM Modi ,New Delhi ,Kalpakak, Tamil Nadu ,Bharatiya Nabikiya Vidyut Nikam Limited ,Bhavini ,Indian Nuclear Industry ,
× RELATED 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு...