புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருமடங்காக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில், புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தாங்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்கள் புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
எனவே அவர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறு சிலிண்டர் (5கிலோ) ஒதுக்கீட்டை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இரட்டிப்பாக்கியுள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் துணையுடன், இந்த 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் மாநில அரசுகளுக்கும், அவற்றின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறைகளுக்கும் வழங்கப்படும் என்றும்; இவை அந்தந்த மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர்களின் சராசரி தினசரி விநியோகத்தின் அடிப்படையில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு அமையும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சிலிண்டர்களின் சராசரி தினசரி விநியோக அளவின் அடிப்படையில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லுபடியாகும் மத்திய, மாநில அரசுகளின் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேசன்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று சிலிண்டர் விநியோகஸ்தர்களை அணுகி 5 கிலோ சிலிண்டரை பெற்று கொள்ளலாம்.
5 கிலோ சிலிண்டர்களுக்கு தற்போது பெரும் தேவை உள்ள காரணத்தால் அதனை பூர்த்தி செய்ய அரசும் விநியோகத்தை அதிகரித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த மார்ச் மாதம் 23 முதல் சுமார் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிலும் கடந்த ஏப்ரல் நான்காம் தேதியன்று ஒரே நாளில் 90,000-க்கு மேற்பட்ட சிலிண்டர்கள் விற்பனையாகின.
