×

தொடர் விடுமுறையால் உற்சாகம் குளுகுளு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் : தொடர் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக அதிகமாக இருந்தது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகம் இருப்பது வழக்கம். புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது.

இதன் எதிரொலியாக பில்லர் ராக், குணா குகை, பைன் மரச்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் நடமாட்டம் மிக அதிகரித்து காணப்பட்டது. வழக்கம்போல் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், எளிதில் செல்ல வழியின்றி அவை தேக்கமடைந்தன. இதனால் அவற்றில் இருந்தோர் அவதிக்குள்ளாயினர்.

நகரின் மையப்பகுதியில் உள்ள பிரையண்ட் பூங்காவின் புல்வெளியில் சுற்றுலாப்பயணிகள் அமர்ந்தும், நட்சத்திர ஏரியில் படகு மற்றும் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மலைப்பகுதியில் நேற்று குளிர்ச்சியான காலநிலை நிலவியதால், அதனை மகிழ்ச்சியிடன் அனுபவித்த சுற்றுலாப்பயணிகள் நடனமாடியும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களை உற்சாகமாக கழித்தனர். பயணியர் வருகை அதிகரிப்பு, சிறு வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கார்கள் மோதல்; பயணிகள் காயம்

கொடைக்கானலில் உள்ள வத்தலக்குண்டு மலைச்சாலையில், உகார்த்தே நகர் அருகே பழுதான சொகுசு வாகனம் சாலையின் இடது ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி குறுகிய சாலை என்பதால், வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

நேற்று இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்த இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு காரின் இரண்டு டயர்களும் வெடித்தன. இவற்றில் இருந்த பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர்.

Tags : Kodaikanal ,Dindigul district ,Good Friday ,
× RELATED அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி...