ஏலகிரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*படகுசவாரி செய்தும், பூங்காவில் விளையாடியும் குடும்பத்துடன் குதூகலம்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலை சுற்றுலா தளத்தில் விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகில் சவாரி செய்தும் பூங்காவில் குழந்தைகளை விளையாட செய்தும் மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளம் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக இருந்து வருகிறது.

இங்கு எப்போது ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருந்து வருவதால் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைகளின் இளவரசி என போற்றப்படும் இந்த ஏலகிரி மலைக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே உள்ள பார்வை மையங்களில் நிலப்பரப்பின் கீழ் தோற்றங்களை கண்டு ரசித்தும் போட்டோ எடுத்தும் மகிழ்கின்றனர்.

மேலும் இங்குள்ள படகுத்துறை சிறுவர் பூங்கா இயற்கை பூங்கா முருகன் கோயில் கதவநாச்சி அம்மன் கோயில் நிலவூர் படகு துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ந்து தனியார் பொழுதுபோக்கு கூடங்களையும் கண்டு மகிழ்கின்றனர். அதன் அடிப்படையில் சனி, ஞாயிறு விடுமுறையால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நேற்று ஏலகிரியில் குவிந்தனர்.

இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து புங்கனூர் படகு துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளை விளையாட்டு உபகரணங்களில் விளையாட வைத்து அவர்களுக்கு பிடித்த பழங்கள் உணவுகள் சாக்லேட் போன்றவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர்.

இதனை அடுத்து இயற்கை பூங்காவில் சென்று அங்குள்ள செயற்கை நீரூற்று சிறுவர் பூங்கா, பூந்தோட்டம், பாம்புத்தொட்டி போன்றவற்றையும் கண்டு ரசித்து செயற்கை நீரூற்று பகுதியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் அதிக அளவில் தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள் போன்றவை கட்டப்பட்டு பயணிகளின் வசதிக்காக தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி உள்ளதால் பயணிகள் இரண்டு நாள் தங்கி பல்வேறு இடங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையால் மலைச்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஏலகிரி மலை போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: