கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் திட்டங்களால் தலைநிமிரும் விவசாயிகள்

* வேளாண் வளர்ச்சியில் முன்னேற்றம்

* தமிழக அரசுக்கு பாராட்டு

ராஜபாளையம் : தமிழக அரசின் பல்வேறு சிறப்பு மிகு வேளாண் திட்டங்களால், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 5.35 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதனால் அவர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் வேளாண் திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 5.35 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதன்படி நெல் ஊக்கத் தொகையாக ரூ.1,538 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு திட்டம் மூலம் 5,679 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 23.68 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, அதற்காக ரூ.26,724 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் ‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் ரூ.135 கோடியில் 4 ஆயிரம் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.508 கோடியில் 55,574 வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு ரூ.787 கோடி ஒதுக்கப்பட்டு, 50.70 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இவற்றுடன், ரூ.282 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பித்தல், கட்டமைத்தல் பணிகள் செய்யப்பட்டுள்ளன. புதிய வேளாண் கல்லூரிகளில் 3 ஆயிரம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் 4 புதிய வேளாண் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு கடந்த 2019-20-ம் ஆண்டு 1.46 கோடி ஏக்கராக இருந்தது. இது 2023-24ம் ஆண்டு 1.51 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை, பிற மாநிலங்கள் பின்பற்றுவது வாடிக்கையான ஒன்று. இதன்படி கிணற்று பாசனத்தில் விவசாயம் செய்தவர்களுக்கு மின் இணைப்பை வழங்கி விளைச்சலின் அளவை உயர்த்தியது திமுக அரசு.

திமுக ஆட்சியில் ஓராண்டில் ஒன்றரை லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 12 லட்சம் இணைப்புகள் இருந்த நிலை மாறி, தற்போது 20 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.

விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கிய மானியத்துடன், கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் கூடுதலாக 100 ரூபாய் வழங்கினார். அதற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் விவசாயிகள் நலன் காக்க கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தவர் கலைஞர்.

மேலும் திமுக ஆட்சியில் தான் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்பட்டது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினர் மட்டும் நடத்திய வேளாண் கண்காட்சிகளை, தற்போது அரசே நடத்தும் நிலை உருவாகியுள்ளது.

தொடர்ந்து 5 வேளாண் நிதி நிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு மொத்தம் 1,94,076 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேளாண் உற்பத்தி பெருக உழவர் பெருங்குடி மக்கள் நலம்பெறப் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2012 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

வேளாண்மைக்கு பெரிதும் உதவும் ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் உரிய நேரத்தில் நிறைவேறினால் தான் கடைக்கோடிப் பகுதிகளின் பாசனத்திற்கும் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்கும். இதற்காக 5,427 கி.மீ நீளத்திற்கு சி.டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் 8,540 சிறுபாசனக் குளங்கள் தூர்வாரப்பட்டு 2,382 புதிய பண்ணைக்குட்டைகளும், 2,474 ஆழ்துளை மற்றும் குழாய்க் கிணறுகளும் ஏற்படுத்தப்பட்டன.

கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் மீண்டும் சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டன. 213 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்துடன் இணைக்கப்பட்டு ரூ.6,636 கோடி மதிப்பிலான 22.71 லட்சம் மெ.டன் விளைபொருள் வர்த்தகம் நடைபெற்று 19 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இயந்திரமயமான வேளாண்துறை:

வேளாண்துறை இயந்திரமயமாக்குதல் திட்டப்படி ரூ.499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மானியங்களுடன் ரூ.96.56 கோடியில் உருவான 1,205 மையங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வழங்குகின்றன. 1,652 புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இ-வாடகை சேவை மையங்கள் மூலம் 69,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பாசன ஏரிகள் சீரமைப்பு:

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன. சிறு, குறு விவசாயிகளும் பயன்பெற்று வேளாண் உற்பத்தியை பெருக்கிட 814 சிறுபாசன ஏரிகள் ரூ75.59 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன.

தடுப்பணைகள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பாசனப் பணிகள் சிறப்படையும், இந்த நோக்கத்தில் 24 மாவட்டங்களில் ஆறுகளின் குறுக்கே 88 தடுப்பணைகள் ரூ.519 கோடியில் கட்டப்பட்டு பாசனத்திற்கு உதவுவதுடன் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தி வருகிறது.

உற்பத்தித் திறனில் சாதனைகள்

வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இரண்டாம் இடமும், வேர்க்கடலை, தென்னை உற்பத்தியில் 3ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது. 2020-2021ல் இருந்த பாசனம் பெற்ற நிலப்பரப்பு 36.07 லட்சம் ஹெக்டேர். இது 2023-2024ல் 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கரும்பு டன்னுக்கு ரூ.4500 ஆகும்…

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையை கடந்த 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பல்வேறு சிறப்புமிகு அம்சங்கள் இருந்தாலும், விவசாயிகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4500 உயர்த்தி வழங்கப்படும். பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.

என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. கடந்த முறை போலவே, இந்த தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளையும் முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார். இதன்மூலம் விவசாயிகளுக்கு புதுவாழ்வு பிறக்கும். இதுவரை தமிழக அரசு செய்த சாதனைகளுக்கும், இனி வரும் காலங்களில் செய்யப்போகும் சாதனைகளுக்கும் பாராட்டுதல்களுடன் நன்றி தெரிவிக்கிறோம்’ என்றனர்.

Related Stories: