*ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்
கூடலூர் : கூடலூர் அடுத்த ஆமைக்குளம் பகுதியில் காமன் பண்டிகை நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கொண்டாடப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விழித்திருந்து பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காமன் பண்டிகை எனப்படும் கூத்து நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு தேயிலை, காப்பி தோட்டங்களில் வேலை செய்ய சென்ற தொழிலாளர்களால் அவர்கள் சென்ற பகுதிகளில் நடத்தப்பட்டு வந்துள்ளது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் இன்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த கூத்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஆமைக்குளம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியாக காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் காமன் பண்டிகை நடந்தது. சிவனின் மனைவியான பார்வதியின் தந்தை தக்கன் யாகம் ஒன்றை சிவனை அழைக்காமலே நடத்துகிறான்.
இதனால் கோபமடைந்த சிவன் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்து விடுகிறார். தனது கணவரை அழைக்காமல் நடத்தும் யாகத்திற்கு தான் வர முடியாது என பார்வதி கூறிவிடுகிறாள். எனவே தக்கன் செய்யும் யாகத்திற்கு சிவனை வரவழைப்பதற்காக, மன்மதனை ஏவி தவத்தில் இருந்த சிவனின் தவத்தை கலைக்கிறான். இதனால் கோபமடைந்த சிவன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து விடுகிறான்.
இதனை மையமாகக் கொண்டு நடைபெறும் காமன் பண்டிகை, ரதி மன்மதன் திருமணம், தக்கனின் யாகம், ரதி மன்மதன் திருமணம் நடைபெற்ற அன்றே சிவனின் தவத்தை கலைக்க தக்கனின் கோரிக்கையை ஏற்று செல்லும் மன்மதனை தடுக்கும் ரதி, சிவனின் தவத்தை கலைப்பதால் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் வகையில் எமன், காலன், தூதன் வேடமிட்டு தீப்பந்தங்கள் ஏந்தி வரும் காட்சிகள், மனைவியின் தடையை மீறி சென்று சிவனின் தவத்தை கலைத்து அதனால் கோபமடைந்த சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரித்தல், இறந்த கணவனை உயிர்ப்பிக்க கோரி மடிப்பிச்சை கேட்டு வரும் ரதி என கதை முழுவதையும் பாடலாக தாரை, தப்பட்டை முழங்க இந்த கூத்து நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி அதிகாலை 6 மணி வரை நடந்தது. சிவன் மன்மதனை எரிக்கும் காட்சியாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சொக்கட்டான் தீப்பற்றி எரியும்போது அதில் நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் கொண்டு வந்துள்ள உப்பை தூவி வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
மிகவும் பழமையான இந்த பாரம்பரிய நிகழ்ச்சி தங்கள் தலைமுறையோடு மறைந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் இந்த கூத்தினை பிரபலப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
