சென்னை : மோடியின் நிரந்தர கொத்தடிமையானார் எடப்பாடி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிசாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்ட பழியைச் சுமத்தி உள்ளார்.
தன்னை ஆளாக்கி வளர்த்து வார்ப்பித்த தன் தந்தையும், திமுக தலைவருமான கலைஞர் பிணிவயப்பட்ட காலத்தில் கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். கலைஞர் மறைந்தபோது, அவர் அண்ணா மறைந்த வேளையில் எழுதிய நெஞ்சு உருக்கும் இரங்கல் பாவில் வேண்டிக் கொண்டபடி அண்ணா நினைவிடத்திற்கு அருகிலேயே தி.மு.க தலைவரை நல்லடக்கம் செய்ய துடியாய் துடித்தார் ஸ்டாலின்.
அதற்காக தன் சுயமரியாதையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கே சென்று உள்ளம் உருகும் விதத்தில் வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிசாமி ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம், மனிதாபிமானம் சற்றும் இன்றி ஸ்டாலின் வேண்டுகோளை நிராகரித்து உதாசினப்படுத்தினார்.
