மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். வேட்பாளரை வரவேற்கும் விதமாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயநல்லூர் போலீசார் தேர்தல் விதிமுறைப்படி 4 நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என தடுத்து நிறுத்தினர். அதிமுக நிர்வாகிகள் தங்களையும் அனுப்ப கூறி போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணிக்கம், அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது தேர்தல் அதிகாரி, வேட்பு மனுவை கேட்ட போது வேட்பாளர் மாணிக்கம் மற்றும் உடன் வந்த நால்வரிடமும் வேட்பு மனு இல்லை. மனு எங்கே என அதிகாரி கேட்டபோது, வழக்கறிஞர் கொண்டு வருகிறார் எனக்கூறி சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். தொடர்ந்து சுமார் அரை மணிநேரம் காத்திருந்து மனுவை ஆட்கள் கொண்டு வந்த பின்பு, தேர்தல் அதிகாரியிடம் முறையாக தாக்கல் செய்து விட்டு சென்றார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா நேற்று காலை வேட்பு மனு தாக்கல் செய்ய திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ஏராளமானோர் வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக்கூறி வேட்பாளரின் மனைவியை தவிர மற்றவர்களை அனுமதிக்க முடியாது என கூறினர். இதையடுத்து ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்புகளை அகற்ற முயன்றனர். தொடர்ந்து போலீசாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
