தர்மபுரி, ஏப்.3: சட்டமன்ற தேர்தலையொட்டி, பாலக்கோட்டில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருமண பத்திரிக்கை வடிவில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்கும் விழா கல்லூரியில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சதீஸ், தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை வழங்கி பேசுகையில், `வரும் 23ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், தவறாமல் வாக்களிப்பேன் என்றும், என் வாக்கு விற்பனைக்கல்ல என்றும் உறுதி அளித்து, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருமண பத்திரிக்கை வடிவிலான தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது,’ என்றார். பின்னர், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம், வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. அதில் கல்லூரி மாணவிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மாணவிகளுக்கு ரோபோட் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், காரிமங்கலம் தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
