சென்னை: வேட்பு மனு தாக்கலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமர் மோடி, யாருக்கு வாக்கு கேட்பார் என்ற சிக்கல் எழுந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவி வருகிறது. இதில், திமுகவானது காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அதில், 13 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக, கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரசுக்கு 28 தொகுதிகளை கொடுத்துள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தேர்வில் கடுமையான இழுபறி நீடித்து வருகிறது. வாய்ப்பு கேட்டு ஏராளமான காங்கிரசார் டெல்லியில் குவிந்துள்ளனர். தங்களுக்கான தலைவர்களை பிடித்து வாய்ப்பு கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் நிமிடத்துக்கு நிமிடம் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.
வேட்பாளர் தேர்வில் தலையிட்ட ராகுல்காந்தியும், தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்ததாகவும், அதை மாற்றி புதிய பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மத்திய காங்கிரஸ் தேர்வு குழு மீண்டும் மீண்டும் கூடி 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டது. மீதமுள்ள 17 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது. அதாவது, பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, சிவகாசி, நாங்குநேரி, குளச்சல், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கடலூர், சோளிங்கர், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் தலையீட்டுடன் தயாரித்தாலும், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல கோஷ்டிகள் இருப்பதால், அனைத்து தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு, தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில், பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு புகார் சென்றதாகவும், அதனால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், நிவேதிதா ஆல்வா, ஸ்கிரீனிங் கமிட்டி தலைவர் டிஎஸ் தியோ சந்திரசேகர் உள்பட மேலிட தலைவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிர்வாகிகள், எம்பிக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழக எம்பிக்கள், நிர்வாகிகள் பங்கேற்கும்போது வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்படுவதால் காங்கிரஸ் மேலிடம் அவர்களை தவிர்த்துள்ளது. இன்று இரவு ராகுல்காந்தியிடம் இந்த பட்டியல் ஒப்படைக்கப்பட உள்ளது. அவர் மற்றும் மூத்த தலைவர்கள் வேட்பாளர் பட்டியலை இன்று இரவு இறுதி செய்கின்றனர். எனவே இன்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நிலைமை தான் தமிழக பாஜ கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், பெரும்பாலான தொகுதிகள் விரும்பிய தொகுதிகள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படவில்லை என்று பா.ஜ.க. தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்தத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், அந்த 2 தொகுதிகளையுமே அதிமுக எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. தலைமை அண்ணாமலையை வற்புறுத்தினாலும், அவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை என்று ஒதுங்கிக்கொண்டார். பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஒதுக்கிய 27 தொகுதிகளில் 5 தொகுதிகளை மாற்றித்தருமாறு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக சார்பில் 165 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 கட்டங்களாக வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், பாஜக தொகுதிகளை மாற்றிக் கேட்பதால், அ.தி.மு.க. வேட்பாளர்களும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கு வரும் 6-ந் தேதி கடைசி நாள் என்றாலும், இடையே 2 நாட்கள்தான் வேலை நாள். எனவே, அதற்குள் தொகுதிகளை மாற்றிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. ஆனால், மாற்றிக் கொடுக்குமா என்பது கேள்விக் குறிதான். இதுபோன்ற சூழ்நிலையில் தான், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னையில் பிரசாரம் செய்ய வருகிறார். மயிலாப்பூரில் ரோடு ஷோ நடத்துகிறார். வேட்பாளர் இன்னும் அறிவிக்காத நிலையில், யாருக்கு அவர் வாக்கு சேகரிப்பார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பிரதமர் வருவதற்குள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், வேட்பு மனு தாக்கலுக்கு சனி, திங்கள் என்று அரசு அலுவலக நாட்கள் 2 நாட்களே உள்ளன. மொத்தத்தில் நாளையுடன் சேர்ந்து 4 நாட்கள் உள்ளன. இரு தேசிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
