சென்னை: சென்னையில் நாளை மறுநாள் நடக்க இருந்த பிரதமர் மோடி உடனான கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி நாளை ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதற்காக நாளை மதியம் 12.35 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். மாலை 3.25 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுவை புறப்பட்டு செல்கிறார். 4.15 மணிக்கு புதுவை சென்றடையும் பிரதமர் மோடி அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் மாலை 5.50 மணிக்கு புதுவையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை திரும்புகிறார்.
6.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார். தொடர்ந்து கிண்டியில் நாளை மறுநாள் பாஜக நிர்வாகிகள் 150 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருந்தார். இந்நிலையில் சென்னையில் நாளை மறுநாள் நடக்க இருந்த பிரதமர் மோடி உடனான கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் ஹோட்டலில் ஏப்.4ஆம் தேதி காலை 10 மணிக்கு நிர்வாகிகளை சந்திக்கவிருந்தார்.
பாஜக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படாததால் நிர்வாகிகள் கூட்டத்தை மோடி ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என ஒரு சிலரை மட்டும் பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
