×

பதவிக்கு பணம், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை புஸ்ஸி ஆனந்த் வரைக்கும் லஞ்சம்: தவெக நிர்வாகி அடுக்கடுக்காக பகிரங்க புகார்

 

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில், பொறுப்புகள் வழங்குவதில் லட்சக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும், கட்சிக்குள் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் அக்கட்சியின் நிர்வாகி ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கொளத்தூர், அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் தவெகவுக்காகத் தொடர்ந்து வேலை செய்து வந்ததாகக் கூறும் வழக்கறிஞரும், கட்சி நிர்வாகியுமான கண்ணன் என்பவர், கட்சியின் மாதவரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எல்.பிரபு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது: எம்.எல். பிரபு வட்டித் தொழில் செய்பவர். வட்டியை வசூல் செய்வதற்காக நில அபகரிப்பு செய்பவர்கள், ரவுடிகள், கிரிமினல் வழக்குகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் உள்ளவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகளை வழங்கியுள்ளார். என்னைப்போன்ற படித்த வழக்கறிஞர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்காமல், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கே கட்சியில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

தவெக-வில் வட்டச் செயலாளர், அணி அமைப்பாளர், இணை அமைப்பாளர் என அனைத்துப் பதவிகளும் பணத்துக்கு விற்கப்படுகிறது. முற்றிலுமாகப் பணத்திற்காக மட்டுமே இந்தக் கட்சி செயல்படுகிறதா என நான் தளபதி விஜய்யைக் கேட்கிறேன். ஆரம்பத்தில் நடந்தே வந்த மாவட்டச் செயலாளர் பிரபுவிடம் இன்று எண்ண முடியாத அளவுக்கு கார்களும், கைகளில் 10 மோதிரங்களும் உள்ளன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? பதவிகளை விற்று சம்பாதிக்கும் இந்தப் பணம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரை பட்டுவாடா செய்யப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

விஜய்யின் மேடைப் பேச்சுகளுக்கும் கள எதார்த்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேடைக்கு மேடை பெண்களுக்குப் பாதுகாப்பு, சுயமரியாதை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என விஜய் பேசுகிறார். ஆனால், எங்கள் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரிடமே அத்துமீறல் நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எம்.எல்.பிரபுவிடம் புகார் அளித்தபோது, ‘நான் என்ன எல்லோருக்கும் செக்யூரிட்டி வேலையா பார்க்க முடியும்?’ என அலட்சியமாகப் பதிலளித்தார். திருக்குறளை சொன்னால் மட்டும் போதாது, அதன்படி செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களே, கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள். எம்.எல்.பிரபு போன்ற குற்றப் பின்னணி உடையவர்களையும், மோசடி செய்பவர்களையும் வேட்பாளராக நிறுத்தியுள்ள இவர்களுக்கு உங்கள் வாக்கைச் செலுத்தாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக-வின் சொந்த கட்சி நிர்வாகியே ‘பதவிக்குப் பணம்’, ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’, ‘புஸ்ஸி ஆனந்த் மீது ஊழல் குற்றச்சாட்டு’ என அடுக்கடுக்கான புகார்களைப் பகிரங்கமாக முன்வைத்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu Victory Club ,Vijay ,Kolathur, Ambattur ,Madhavaram ,
× RELATED ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக்...