வேலூர்: காட்பாடி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டம், காட்பாடியில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: சொன்னதை செய்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதாக சொன்னபோது அது சாத்தியமில்லை என விமர்சித்தவர்கள் மத்தியில், அதை சாதித்து காட்டிவிட்டு இன்று வாக்கு கேட்கிறோம்.
காட்பாடி தொகுதியில் 1971ல் நான் முதன்முதலில் போட்டியிட்டபோது, மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் ரயில் நிலையங்களுக்கு சென்றனர். ஆனால் இன்று மக்களின் வீடுகளுக்கே காவிரி தண்ணீரை கொண்டு வந்தவன் இந்த துரைமுருகன். பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்ட பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.48 கோடி செலவில் சென்னைக்கு இணையான ஒரு பிரம்மாண்ட பாலத்தை கட்டி கொடுத்தேன்.கடந்த 45 ஆண்டு கால எனது அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் ஐந்து பைசா லஞ்சம் வாங்கியதில்லை. எந்த எதிர்க்கட்சிக்காரரையும் பழிவாங்கியதோ, பொய் வழக்கு போட்டதோ கிடையாது. மக்களிடம் எந்த பந்தாவும் காட்டாமல், காட்பாடி தொகுதியை ஒரு ‘திருக்கோயில்’ போலவும், மக்களை தெய்வங்களாகவும் கருதி பணியாற்றி வருகிறேன். அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்கு பரிசளியுங்கள்.
1971ல் நான் பார்த்த குழந்தைகள் இன்று பேரக்குழந்தைகளை எடுத்து விட்டார்கள். என்னை எதிர்த்து நிற்க உள்ளூரில் ஆளில்லாமல், வெளியூரிலிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இந்த ஐந்தாண்டு காலத்தில் தொகுதிக்கு தேவையான மீதமுள்ள அனைத்து பணிகளையும் முழுமையாக செய்து முடித்துவிட்டு, நானே உங்களிடமிருந்து விட்டு விடுங்கள் என கூறுவேன். என் வாழ்நாளில் எப்போதும் இப்படி உங்களிடம் தலைவணங்கி வாக்கு கேட்டதில்லை, இன்று தலைவணங்கிக் கேட்கிறேன். எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி தேடி தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
