×

திமுகவின் தேர்தல் அறிக்கையானது சூப்பர் ஸ்டார் அறிக்கை; விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏன் இல்லை?- வேட்பாளர்களை அறிமுகம் செய்து பெ.சண்முகம் விளக்கம்

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையானது சூப்பர் ஸ்டார் அறிக்கை என்றும், விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏன் இல்லை? என்பது குறித்து பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் தலைமை அறிவித்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநில செயலாளர் பெ.சண்முகம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர், பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கை என்பது, மாநில அரசாங்கத்தினுடைய அதிகாரத்திற்கும் நிதிநிலைமைக்கும் உட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நிச்சயமாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடிய வகையிலேயும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயும், குறிப்பாக பெண்களுக்கான பல புதிய நலத் திட்டங்களை இந்தத் தேர்தல் அறிக்கையிலே அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்குமே இலவசமாக புதிய மின்மோட்டார்களை வழங்குவது என்பது இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்த மாநில அரசாங்கத்தாலும் சொல்லப்படாத ஒரு வாக்குறுதி என்பது இந்த மாநிலத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பழைய மின்மோட்டார்களை வைத்து அதன் விளைவாகவே பல்வேறு விதமான மின் இழப்புகளும், பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது.

ஆகவே, அனைத்து மின் இணைப்பு வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக புதிய மின்மோட்டார்களை வழங்குவது என்பது மிகுந்த வரவேற்கத்தக்க ஒரு வாக்குறுதி. அதே மாதிரி கரும்புக்கும் நெல்லுக்குமான கொள்முதல் விலையை நாங்கள் உயர்த்துவோம் என்றெல்லாம் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி சம்பந்தமாக இந்த தேர்தல் அறிக்கையிலே இல்லை என்கிற ஒரு குறையை விவசாயிகள் பலரும் என்னிடத்திலே தெரிவித்தார்கள். நேற்று மாலை முதல்வரிடம், இதை பற்றி கேட்டுக் கொண்டோம். ஆனால் இப்போது புதிதாக வந்திருக்கக்கூடிய கூட்டுறவு சட்டப்படி, ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தால் தான் கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்கிற ஒரு புதிய நிலைமை என்பது ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நாம் ஆட்சிக்கு வந்து பாஜக, அதனால் அனுமதி தர முடியாத, தராத ஒரு நிலைமை ஏற்பட்டால் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதனால் தான் நான் அந்த வாக்குறுதியை வழங்கவில்லை என்று முதல்வர் விளக்கத்தைத் தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை என்பதும், இந்தத் தேர்தலில் அதுதான் பேசுபொருளாகவும், இதுவரை வெளிவந்திருக்கிற தேர்தல் அறிக்கைகளிலேயே சூப்பர் ஸ்டாராகவும் திமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது. முழுமையாக 525 வாக்குறுதிகள் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை நிறைவேற்றப்பட்டால் அரசின் மூலமாகப் பலன் பெறாத எந்த ஒரு குடும்பமும் இல்லை என்கிற நிலைமையை நிச்சயமாக ஏற்படுத்த முடியும். ஆகவே அந்த தேர்தல் அறிக்கை இந்தத் தேர்தலில் நிச்சயமாக விவாதப் பொருளாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dimuka ,Sanmugam ,Chennai ,Dimukha ,Sanmugham ,Tamil Nadu ,Legislative ,Council ,
× RELATED புகை எச்சரிக்கை: லக்னோவில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்!