×

‘ஹார்முஸ்’ வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டண வசூலில் புதிய மாற்றம்; அமெரிக்காவின் டாலருக்கு ஆப்பு: ஈரானிய ரியாலுக்கு அனுமதி

‘ஹார்முஸ்’ வழியாக செல்லும் இந்தியா உட்பட நட்பு நாட்டு கப்பல்களிடம் அமெரிக்காவின் டாலருக்கு பதிலாக ‘ரியால்’ கரன்சியில் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் ஓமனுடன் இணைந்து ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 31 நாட்களாக போர் நடந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 25 சதவீத இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், அங்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கி வருகிறது. ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு ‘ஹார்முஸ் நீர்சந்தி மேலாண்மை திட்டம்’ என்ற புதிய கொள்கைக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விதியின்படி, ஹார்முஸ் நீர்சந்தி வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ரியால் மூலம் மட்டுமே சேவை கட்டணங்களை செலுத்த வேண்டும். இதற்காக ஒரு கப்பலுக்கு சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய ரியால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய சட்டத்தின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு கப்பல்கள் இந்த வழியாக செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும், ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டுடன் இணைந்து இதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்புகளை ஈரான் உருவாக்கி வருகிறது. இந்த புதிய நடைமுறையின்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ‘நட்பு நாடுகள்’ என்று ஈரான் வகைப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் வழித்தடத்தில் பாதுகாப்பாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு அல்லது பாதுகாப்பின் கீழ் இந்த கப்பல்கள் செல்லலாம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஈரான் அதிகாரிகளிடம் பயணத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தனது எதிரி நாடுகளாகக் கருதும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் முற்றிலும் தடை விதித்துள்ளது. அந்த நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் கப்பல்களும் இந்த வழியாக செல்ல அனுமதி இல்லை. மற்ற நடுநிலை நாடுகளின் கப்பல்கள், ஈரானின் எதிரி நாடுகளுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், ‘சூயஸ் கால்வாய் அல்லது பனாமா கால்வாய் போன்றே எங்களுடைய ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் கட்டணம் செலுத்துவது இயற்கையானது. போருக்கு என்று சில செலவுகள் உள்ளன. சர்வதேச சந்தையில் எங்களுடைய தேசிய நாணயத்தை வலுப்படுத்தவும், மேற்கத்திய நிதி அமைப்புகளை தவிர்க்கவும் இந்த நீண்டகால திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஹார்முஸ் நீர்சந்தி என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட கால்வாய் அல்ல,
அது ஒரு இயற்கை நீர்வழிப்பாதை என்பதால் ஐநா கடல்சார் சட்டப்படி கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு உரிமை இல்லை என்று அவை வாதிடுகின்றன. ஆனால், தனது ராணுவ பலத்தை நிலையான பொருளாதார பலனாக மாற்றும் முயற்சியில் ஈரான் உறுதியாக உள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு தரப்பில், ‘எங்கள் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த நீண்டகால திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே உரிய பாதுகாப்புடன் அனுமதி வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்று அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது சில நாடுகள் ஈரான் அரசுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்களை செய்து கொண்டு இந்த ஜலசந்தியை கடந்து வருகின்றன. ஆனால், விரைவில் அமெரிக்காவின் பாதுகாப்பு அல்லது பன்னாட்டு கூட்டு பாதுகாப்புடன் இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் நிலைநாட்டப்படும். அமெரிக்கா மீண்டும் இந்த ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அல்லது ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காக திறந்து விடப்படாவிட்டால், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை குண்டு வீசி முற்றிலும் அழிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சில வாரங்களிலேயே முடிவுக்கு வரும்;
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், ‘ஈரானின் ஆட்சி மாற்றத்தை இப்போதைய நோக்கமாகக் கொள்ளாமல், அந்த நாட்டின் ராணுவத் திறனை அழிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளோம். ஏற்கனவே ஈரானிய விமானப் படை மற்றும் கடற்படையை அமெரிக்கா அழித்துவிட்டது. தற்போது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அழிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த இலக்குகள் எட்டப்பட்டவுடன், சில வாரங்களிலேயே இந்த ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்கள் அணுசக்தியை மின்சாரத் தேவைக்காகப் பயன்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளைப் போல இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்தலாம். ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வைத்திருக்கக் கூடாது. மேலும், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதையும், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஏவுகணைத் தயாரிப்பையும் ஈரான் நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது எங்களது முக்கிய முன்னுரிமை. இதை ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது ராணுவ பலம் மூலமாகவோ அமெரிக்கா நிச்சயம் செய்யும். இந்த மோதலின் போது வான்வெளி மற்றும் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின் போன்ற நேட்டோ நட்பு நாடுகளின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது. போர் முடிந்த பிறகு இந்த உறவுகள் குறித்து மறுபரிசீலனை. அதேசமயம், வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்’ என்றார்.

சவுதியில் 12 அமெரிக்க வீரர்கள் காயம்;
சவுதி அரேபியாவின் உட்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் இளவரசர் சுல்தான் விமான தளத்தின் மீது தற்போது ஈரான் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் அரை பில்லியன் டாலர் மதிப்புள்ள இ-3 சென்ட்ரி அவாக்ஸ் என்ற அதிநவீன கட்டுப்பாட்டு விமானம் நேரடியாகத் தாக்கி அழிக்கப்பட்டது. அத்துடன் கேசி-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்றும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக ரஷ்ய செயற்கைக்கோள்கள் இந்த தளத்தை புகைப்படம் எடுத்து ஈரானுக்கு உதவியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது எங்களது நோக்கமல்ல, ஆனால் கடல்சார் வணிகம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் ஈரானின் நடவடிக்கையில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஐநா அமைதிப்படை வீரர் பலிக்கு இந்தியா கண்டனம்;
லெபனானின் அட்சித் அல் குசையர் அருகே உள்ள ஐநா தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமைதிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொரு வீரர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் வெளியிட்ட பதிவில், ‘மோதல் பகுதிகளில் ஐநா உத்தரவின்படி மிகவும் கடினமான சூழ்நிலைகளில் அமைதிப்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். லெபனானில் உள்ள ஐநா இடைக்காலப் படையில் பணியாற்றும் வீரர்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் கண்டிக்கிறது. உயிரிழந்த வீரர்களுக்கு எங்களது அஞ்சலியைச் செலுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபனானில் உள்ள ஐநா அமைதிப்படை வீரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். வீரர்களின் பாதுகாப்பை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது. நீலக்கோடு பகுதியில் இருதரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என்றும் ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனர்களுக்கு மரணதண்டனை;
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் அங்கு நடந்த பல்வேறு தாக்குதல்கள் தொடர்பாக ஏராளமான பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரணதண்டனை வழங்குவதை கட்டாயமாக்கும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 62 உறுப்பினர்களும், எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த புதிய சட்டமானது அடுத்த 30 நாட்களில் நடைமுறைக்கு வர உள்ளது. எனினும், இதற்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த சட்டத்திற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : US ,Iran ,India ,Oman ,Trump ,Israel… ,
× RELATED பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு...