சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக வேட்பாளர்கள் கடைசிநாளான 6ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம்தேதி நடக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து விட்டது. நேற்று (30ம்தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்ததுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாள் 6ம்தேதி ஆகும். அன்று மிகவும் நல்ல நாள் என கூறப்படுகிறது. இதனால் அன்று தான் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6ம்தேதி இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். அதிமுகவை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் 6ம்தேதி தான் மனு தாக்கல் செய்கின்றனர்.
