வடமேற்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் பாமக, அதிமுகவுக்கு எதிராக வேட்பாளர்களை அடுத்தடுத்து களமிறக்கும் ராமதாஸ், சசிகலா: அதிர்ச்சியில் அன்புமணி, எடப்பாடி தரப்பு

திண்டிவனம்: தமிழகத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த பாமக தற்போது பிளவுபட்ட கட்சியாக இத்தேர்தலை களம் காண்கிறது. தலைவர் அன்புமணி தலைமையிலான பாமக தேஜ அணியில் 18 தொகுதியிலும், நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி, சசிகலாவின் அஇபுமமுகவுடன் இணைந்தும் தேர்தலில் போட்டியிடுகிறது. வடமேற்கு தொகுதிகளில் ராமதாஸ் தனது அணி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை அறிவிக்காத நிலையில் நேற்று முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் சேலம் மேற்கில் அருள், வந்தவாசி முரளிசங்கர், கும்பகோணம் ம.க.ஸ்டாலின், விருத்தாசலம் சுரேஷ், மயிலாடுதுறை பாக்கம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

இதில் அன்புமணி அணியில் சேலம் மேற்கில் கார்த்தி, விருத்தாசலத்தில் தமிழரசி ஆதிமூலம், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமி ஆகியோரை எதிர்த்து ராமதாஸ் தனது அணி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அவர் அறிவிக்கவுள்ள 2வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும், அன்புமணி அணிக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறக்க முடிவு செய்துள்ளார். இதேபோல் தென்கிழக்கு மாவட்டங்களில் செல்வாக்குமிக்க சசிகலாவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பிரபலங்களுக்கு எதிராக தனது கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்களாக 21 பேரை அறிவித்து வருகிறார். அதில் திருத்தணியில் அரசு முன்னாள் தலைமை கொறடா நரசிம்மன், நாங்குநேரியில் முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ச.வெள்ளத்துரை, கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் உள்ளிட்ட தொகுதிகளில் செல்வாக்குமிக்க முக்கிய பிரபலங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த வேட்பாளர்கள் அறிவிப்பு பட்டியலிலும் அரசியல் துரோகிகள், எதிரிகள், ஷாக் கொடுக்கும் வகையில் பட்டியலை தேர்வு செய்து வருகின்றனர். துரோகிகளுக்கு பாடம் புகட்டவே இந்த கூட்டணி எனத் தொிவித்திருந்த ராமதாசும், சசிகலாவும் பாமகவுக்கும் (அன்புமணி அணி), அதிமுகவுக்கும் (எடப்பாடி) எதிராக மக்களிடம் பிரசித்தி பெற்ற வாக்காளர்களை ஏட்டிக்கு போட்டியாக களமிறக்கி வருவதால் அந்த அணிகளின் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தேர்தல் பிரசாரத்தின்போது தோலுரித்துக் காட்டவும் இருவரும் முடிவெடுத்து இருப்பதால் தங்களுக்கு வரவேண்டிய வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடும் என்பதால் அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியும் அதிர்ச்சியில் உள்ளதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி.கே.மணி பேச்சால் கொந்தளித்த நிர்வாகிகள்;
இதனிடையே திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று வேட்பாளர்களை ராமதாஸ் அறிவிப்பதற்கு முன்பு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி, கட்சிக்கு எல்லோரும் துரோகமிழைத்து அதல பாதாளத்துக்கு தள்ளிவிட்டனர். நாம்தான் உழைத்து கட்சியை முன்னேற்ற வேண்டும் என மைக்கில் பேசியுள்ளார். அப்போது ஆவேசமாக குறுக்கிட்ட அங்கிருந்த நிர்வாகிகளில் சிலர், இந்த கட்சி அழிய காரணமே நீங்கள்தான். திராவிட கட்சிகளில், ஒன்றில் நாம் கூட்டணி சேர்ந்து குறைந்த தொகுதிகளையாவது பெற்று களமிறங்கி இருக்கலாம். ஆனால் எதுக்குமே வழியில்லாத நிலையை இன்று நீங்கள் ஆக்கி விட்டீர்கள். ஆனால் உங்க மகனை சேப்டியாக காங்கிரசுக்கு அனுப்பி உள்ளீர்கள். இந்த கட்சியும், அய்யாவும் என்ன ஆவது? என தங்களது மனக்குமுறலை ராமதாஸ் முன்னிலையில் கொட்டித் தீர்த்து உள்ளனர்.

Related Stories: