கோழிக்கோட்டில் இன்று ராகுல் காந்தி பிரசாரம்: பாஜவுக்கு வாக்கு சேகரிக்கிறார் நடிகை குஷ்பு

திருவனந்தபுரம்: கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி இன்று கோழிக்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். பாஜ வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்புவும் இன்று கோழிக்கோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் கேரளாவில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பிரசாரத்திற்காக கேரளா வந்துள்ளார்.

அதன்படி நேற்று பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். இன்று கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்லும் ராகுல் காந்தி பேராம்பிரா, பாலுசேரி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து கண்ணூரிலும் பிரசாரம் செய்கிறார். இதற்கிடையே பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நடிகை குஷ்பு இன்று கோழிக்கோடு வருகிறார்.

இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினரான மரியம் தாவ்லேவும் கேரளா வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க பாஜவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இக்கட்சியின் தேசிய தலைவரான நிதின் நபின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

Related Stories: