கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் மற்றும் நீலகிரி கிழக்கு சரிவு சரகம் ஆகிய வனச்சரகங்களின் சார்பில் மாணவர்களுக்கான வன உயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மசினகுடி வனச்சரகம் சார்பில் மாயார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தெப்பகாடு பகுதியில் நடத்தப்பட்டது. மேலும் மசினகுடி, பொக்காபுரம் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சீகூர் வனச்சரகம் சார்பில் ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 45 பேர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறியூர் ஹள்ளா ஆற்றோரப் பகுதிகளில் இயற்கை பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்கள் அருளகம் விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆனைக்கட்டி ஓய்வு விடுதியில் ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி விரிவுரையாளர் ராமகிருஷ்ணன், யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நீலகிரி கிழக்கு சரிவு சரகத்தின் சார்பில் தெங்குமரஹடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அல்லிமாயார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வன உயிரினம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மாணவர்களுக்கு வன உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், இயற்கை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
