*மக்கள் கோரிக்கை ஏற்று மாநகராட்சி நடவடிக்கை
தியாகராஜ நகர் : பாளை வேய்ந்தான்குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீரோடையை ஆக்கிரமித்து காணப்பட்ட மண், ஜல்லி ஆகியவற்றை மக்கள் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அகற்றி சீரமைத்துள்ளது.
பாளை வேய்ந்தான்குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீரோடையானது ஆக்கிரமித்து கொட்டப்பட்ட மண், ஜல்லியால் அடைபட்டுள்ளதால் அதை அகற்றி சீரமைக்க வேண்டும் என பாளை டிரைவர்ஸ் ஒ. ஏ. காலனி மக்கள் நலச் சங்க தலைவர் நல்லபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் மேலப்பாளையம் மண்டலம் 55வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலனி பகுதியில் அரசு துறைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் உள்ளன.
இருப்பினும் இது தாழ்வான பகுதியாகும். மழை காலத்தில் விரிவாக்க பகுதியில் உள்ள ஏ. காலனி, ஐயப்பா நகர், எழில் நகர் போன்ற தெற்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நகரில் இருந்தும் அதிகமான மழைநீர் இந்த பகுதி வழியாகதான் வேய்ந்தான்குளத்திற்கு செல்லும். அந்த மழைநீர் இங்குள்ள சுமார் 300 வீடுகளுக்குள் புகுந்ததால், நாங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினோம்.
இதனிடையே இக்காலனி தெற்கு தெருவில் (பி.எப். ஆபீஸ் சாலை) வாறுகால் அமைத்து அதன் வழியாக மழைநீர் செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுவது தடுக்கப்பட்டது. சமீபத்தில் இந்த பகுதியில் உள்ள மருந்து கட்டுபாட்டு துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் வானம் தோண்டும்போது கிடைத்த மண்ணை அருகில் உள்ள மழைநீர் வடிகால் மீது எவ்வித தடுப்பும் அமைக்காமல் போடப்பட்டு மழைநீர் வடிகால் மூடப்பட்டது. வாறுகால் சேதமின்றி மண்ணை அகற்ற நலச்சங்கம் சார்பில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
சமீபத்தில் இருமுறை மழை பெய்தபோது இப்பகுதி மக்கள் பயந்து வாழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக இந்த பணி ஒப்பந்தக்காரர் மூலம் செயல்படுத்தும் அரசு பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமும் நேரிலும் தகவல் தெரிவிக்கப்பட்டும் மண் அகற்றப்படாததோடு மேலும் அதன் மீது பணிக்கான ஜல்லிகள் கொட்டி வருவதால் மழைநீர் பாதை அடைக்கப்படுவதுடன் வாறுகால் சேதமடைய வழிவகுக்கும்.
இதனால் அடுத்துவரும் மழை காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் சூழல் நிலவுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து வாறுகால் சேதமின்றி மண்ணையும், ஜல்லி கற்களையும் அப்புறப்படுத்தி தடையின்றி மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம், இவ்வாறு பாளை வேய்ந்தான்குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீரோடையை ஆக்கிரமித்து கொட்டப்பட்ட மண், ஜல்லியை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டது.
அதன்பேரில் இதற்கான சீரமைப்பு பணியானது ஜேசிபி மூலம் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பாளை டிரைவர்ஸ் ஒ. ஏ. காலனி மக்கள் மற்றும் மக்கள் நலச்சங்கத் தலைவர் நல்லபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் இதை வரவேற்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
