பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு பிரேத பரிசோதனைக்கு தாமதத்தால் திடீர் மறியல்

*ஆத்தூரில் பரபரப்பு

கெங்கவல்லி : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தழுதாழையைச் சேர்ந்தவர் ரமேஷ்(27). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி அருணாதேவி(23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அருணாதேவிக்கு, கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

வீடு திரும்பிய அருணாதேவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, அருணாதேவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் அருணா தேவியின் தாயார் ராணி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் தொிவித்தார். இதன் பேரில் கெங்கவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

பின்னர், அருணாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சந்தேக மரணம் என்பதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது எனக்கூறி, நேற்று மதியம் 1.30 மணியளவில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால், உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனை முன் திடீரென சாலை மறியலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, அருணாதேவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: