காங்கயத்தில் ரூ.9.62 கோடியில் திறந்தவெளி திங்கள் சந்தை மேற்கூரையுடன் விசாலமானது

காங்கயம் : காங்கயம் நகராட்சி வாரச்சந்தைக்கு ரூ.9.62 கோடி மதிப்பில் நடைபெற்ற அடிப்படை வசதிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்தது.காங்கயம் வாரச்சந்தை மிகப்பெரிய சந்தையாகும், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கூடும் இந்த சந்தைக்கு திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வருவார்கள்.

மேலும் காங்கயம் சுற்று வட்டார பகுதயில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமக்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் விளைவித்த பொருட்களையும், வியாபார பொருட்களையும் கொண்டு வந்து இந்த சந்தையில் விற்பனை செய்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதும் வழக்கம்.

வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் வரும் இந்த சந்தையில் கடந்த 15 வருடங்களாக அடிபடை வசதிகள் செய்து தரப்படாததால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

அதுமட்டுமின்றி கடைகளுக்கு தரை தளமோ, மேற்கூரையோ அமைத்து தரப்படாததால் தங்களது சாக்கு, தார்பாய் கொண்டு கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். குறிப்பாக மழை காலங்களில் தாங்கள் விற்பதற்கு எடுத்து வந்த பொருட்களையும் மழையில் நனையாமல் காப்பாற்ற ஒதுங்கக்கூட இடமில்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

தரைகளில் பொருட்களை போட்டு விற்பனை செய்வதால் கூட்டம் நெரிசலில் காலில் மிதித்தும், மழை காலங்களில் தண்ணீரில் அடித்தும் சென்றது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுபோன்ற குறைபாடுகளை கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கண்டும் காணாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ரூ.9.62 கோடி மதிப்பில் 300 கடைகளுடன், அடிப்படை வசதி மேம்படுத்தும் பணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக வழித்தடம், மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், அதனை பொதுமக்கள் வாங்கி செல்லும் வகையில் பெரிய அளவிலான ஒரு குடோன் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: வாரச்சந்தைக்கு பல வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை விடுக்கப்பட்டது. மண் தரையில் மேற்கூரை இல்லாமல் மழை, வெயில் காலங்களில் கடும் சிரமப்பட்டு வந்தோம்.

பல வருடங்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு அதற்கான பணிகளை செய்தனர். 300 கடைகள் வரை அமைக்கப்பட்டது. இதனால் சுகாதாரமாகவும் மக்கள் வந்து செல்ல ஏதுவாகவும் உள்ளது. பொருட்கள் பாதுகாப்பாக விற்பனை செய்ய முடிகிறது. இப்பணிகளை மேற்கொண்ட அரசுக்கும், அமைச்சரும் பாராட்டு தெரிவிக்கிறோம்.

Related Stories: