திருப்பூர் : அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது போர் நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல், காஸ் உள்ளிட்ட எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
நாடு முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் பல்வேறு ஓட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டும், உணவுகள் மற்றும் பலகாரங்களின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தொழில் நகரமான திருப்பூரில் உள்ள உணவகங்களுக்கு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 1,700 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சிலிண்டர்கள் தற்போது 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தட்டுப்பாடு ஏற்பட்டது முதலே சிறு தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட முடியாத நிலைக்கு சென்றுள்ளது. பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் காஸ் சிலிண்டருக்கு பதிலாக உணவகங்களில் விறகு அடுப்புகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஓட்டல்கள் மட்டுமல்லாது ஹாஸ்டல் வசதியுடன் உள்ள பனியன் நிறுவனங்களிலும் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விறகுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் வரை 1 டன் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்ட விறகு தற்போது ரூ.3,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறும்போது, வணிக காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடரத்தான் செய்கிறது. ஒருசிலர் இந்த காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பிற்கு மாறி வருகிறோம். சொந்த கட்டிடம் என்றால் எளிதாக விறகு அடுப்பிற்கு மாறிவிடலாம். ஆனால் வாடகை கட்டிடம் என்றால் விறகு அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்ய கட்டிட உரிமையானவர்கள் அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர். விறகுகளின் தேவை அதிகரித்ததால் சிலிண்டர்களுக்கு இணையாக விறகுகளின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
