திருப்பூர், மார்ச் 25: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கிடையே மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் சப்-கலெக்டருமான சிவப்பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மண்டல துணை தாசில்தார் அருள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுபோல் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திரையரங்குகளிலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
