செந்துறை அருகே வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

அரியலூர், மார்ச் 27: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி தங்கம்மாள் வயது (50) விவசாயி. கணவரை இழந்த நிலையில் ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு தங்கள் வயலுக்கு ஓட்டிச் சென்றார். ஆறு ஆடுகளும் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த நிலையில், அப்போது அங்கு வந்த வெறி நாய்கள் ஆறு ஆடுகளையும் கடித்து குதறியது. இதில், சம்பவ இடத்திலேயே 6 ஆடுகளும் மூதாட்டி கண்முன்பே பரிதாபமாக உயிர் இழந்தது.

இதனைக் கண்ட மூதாட்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டிக்கு ஆறுதல் கூறினர். இதேபோல் இலங்கைச்சேரி கிராமத்தில் வெறி நாய்களால் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதோடு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அந்த மூதாட்டிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

 

Related Stories: