தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜ சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
கூட்டத்தில், பாஜ வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘வேட்பாளர்கள் யார் என்பதை கட்சியின் உயர்நிலை குழு கமிட்டி கூடி முடிவு செய்வோம். எங்களுடைய வேட்பாளர்களை அகில இந்திய பார்லிமெண்ட் போர்டு குழு முடிவு செய்யும். தேர்தல் அறிக்கை இரண்டு தினங்களில் வெளியிடப்படும்’’ என்றார்.
