×

தமிழ்நாட்டில் 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளுடன் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

 

டெல்லி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறும் 3.6 சதவிகிதம் பள்ளிகளில் மட்டுமே திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன. திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றபின், ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் மாநிலமாக எழுச்சிபெற்றுள்ளது என்பதை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். 2024-25ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டிலுள்ள 82.5 சதவிகித அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்து, திறன்மிகு வகுப்பறைகள் கொண்டுள்ளதில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் எனும் சாதனை பறைசாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன்மிகு வகுப்பறைகளில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இந்த திறன்மிகு வகுப்பறைகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருப்பதை இந்த அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, குஜராத் மாநிலத்தில் 57.1 சதவிகிதப் பள்ளிகளிலும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெறும் 7.6 சதவிகிதப் பள்ளிகளிலும், மகாராட்டிர மாநிலத்தில் வெறும் 4.6 சதவிகிதப் பள்ளிகளிலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறும் 3.6 சதவிகிதப் பள்ளிகளிலும் மட்டுமே திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாட்டில் 43.5 சதவிகித பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்திருந்தன. தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் அனைவரும் தரமான சிறந்த கல்வி கற்று இந்திய அளவில் உயர்ந்து மிளிர்ந்திட வேண்டும் என்னும் உன்னதமான குறிக்கோளோடு அனைத்து வகையிலும் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை வழங்கினார்கள். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 99 சதவிகித பள்ளிகளில் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படுவதன் மூலம் மாணவ-மாணவிகள் எளிதில் சிறந்த கல்வி கற்க முடியும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் எல்லாம் திறன்மிகு வகுப்பறைகளை உருவாக்கினார்கள்.

அதன் பயனாக 2021-22ஆம் ஆண்டில் இருந்த திறன்மிகு வகுப்பறைகள் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அளவில் உயர்ந்து 2024-25இல் 82.5 சதவிகித பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்துள்ளன. இதனை ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை 2024-25 குறிப்பிட்டுள்ளது. அண்மைக்காலமாக ஒன்றிய அரசு அமைப்புகள் வெளியிட்டுவரும் ஆய்வு அறிக்கைகள் எல்லாம் தமிழ்நாடே முதலிடம் என்பதனை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவரிசையில், திறன்மிகு வகுப்பறைகளைக் கொண்டுள்ளதிலும் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு என்பதை ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கையும் தெளிவாகப் புலப்படுத்தி உள்ளது.

Tags : Tamil Nadu ,EU government ,Delhi ,India ,Union Government ,Uttar Pradesh ,
× RELATED நாகர்கோவில் மாநகர பகுதியின் குடிநீர்...