மன்னார்குடி: மன்னார்குடி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாலையக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து (80). விவசாயி. திமுக முன்னாள் அவை தலைவர். இவரது மனைவி தனலெட்சுமி (74). திருமணமாகி 52 ஆண்டுகளாகிறது. இவர்களது மகன்கள் வேதநாதன், மகேஷ், சுரேஷ். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள், மருமகள்களோடு காளிமுத்து-தனலெட்சுமி தம்பதி கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். 52 வருடங்களாக காளிமுத்து-தனலெட்சுமி தம்பதி ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த காளிமுத்து நேற்று மதியம் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் பரிசோதித்தபோது காளிமுத்து மாரடைப்பால் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மகன்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
காளிமுத்துவின் உடலை குளிப்பாட்டி கூலர் பாக்சில் வைத்து கொண்டிருந்தபோதே தனலெட்சுமியும் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து இருவரது உடல்களும் இன்று சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் பாலையக்கோட்டை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
