×

ஆண்டிபட்டியில் ரூ.11.70 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

*விரைவில் திறப்பு விழா காண்கிறது

*தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் வக்கீல்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.11.70 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 95% பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ளது. 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள், வக்கீல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. போதிய இடவசதி இல்லாததால் வழக்கு நிமித்தமாக வரும் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால், சொந்தக் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டு காலமாக இருந்து வந்தது.

தமிழக அரசு நடவடிக்கை

பொதுமக்களின் நலன்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, வக்கீல்களின் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரி பின்புறமுள்ள அரசு நிலத்தை நீதிமன்றத்திற்காக ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, ரூ.11.70 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்ட கடந்த 2024 ஆக.9ம் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கப்பட்டது.

நவீன வசதிகளுடன் கூடிய வளாகம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் சுமார் 22,581 சதுரடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. தரைத்தளத்தில் குற்றவியல் நீதிமன்றம், முதல் தளத்தில் நீதிமன்ற அலுவலகங்கள்,‌ இரண்டாம் தளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் அறை, கூடுதல் வசதிகள், காணொளி காட்சி அறை, கணினி அறை, கைதிகள் அறை, வழக்குதாரர்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் உணவருந்தும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான நவீன மின்தூக்கி வசதி மற்றும் சாய்வுதளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழாவிற்கு தயார்

தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் 95 சதவீதப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புச்சுவர், வாகன நிறுத்துமிடம் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ளது.

பொதுமக்கள், வக்கீல்கள் மகிழ்ச்சி

வாடகை கட்டிடத்தில் போதிய வசதிகளின்றி தவித்து வந்த நிலையில், தாராளமான இடவசதி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய நீதிமன்ற வளாகம் அமையப் பெற்றிருப்பது ஆண்டிபட்டி பகுதி மக்கள், வக்கீல்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Tags : Antibar ,Tamil Nadu Government ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள...