*8 தொகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருவண்ணாமலை : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக 5,858 வாக்குப்பதிவு இயந்திரம், 3,260 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,466 ஒப்புகை ரசீது இயந்திரங்கள் உள்பட மொத்தம் 12,584 இயந்திரங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட 8 தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை தொடர்ந்து நடந்தது.
அப்போது, கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், கணினி குலுக்கல் மூலம தொகுதிவாரியாக பிரித்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 2516 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3019, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3019, ஒப்புகை ரசீது இயந்திரங்கள்(விவிபேட்) 3271 ஆகியவை 8 தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடி எண்ணிக்கை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்யாறு: செய்யாறு தொகுதிக்கு தேவையான 400 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 400 கட்டுப்பாட்டு கருவிகள், 434 விவிபேடு இயந்திரங்கள் செய்யாறுக்கு கொண்டு வரப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகாஜெயின் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கலசபாக்கம்: கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரன் முன்னிலையில் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
செங்கம்: செங்கம் தொகுதியில் உள்ள 341 வாக்குச்சாவடிகள் மையங்களுக்கு 341 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், கூடுதலாக 68 ரிசர்வ் இயந்திரங்கள் சேர்த்து மொத்தம் 409 இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் தலைமையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
சேத்துப்பட்டு: போளூர் தொகுதிக்கு தேவையான 358 (இவிஎம்) மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் (சியு), மேலும் 388 (விவிபிஏடி) இயந்திரங்கள் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள 307 வாக்குச்சாவடி மையங்களுக்கான 399 விவி பேட், 368 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 368 பேலட் யூனிட் தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) திரு.செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஆரணி: ஆரணி தொகுதியில் 323 வாக்குச்சாவடி மையங்களுக்கு 87 கட்டுப்பாட்டு இயந்திரம், 387 வாக்குபதிவு இயந்திரங்கள், 419 ஒப்புகை ரசீது, விவிபேடு இயந்திரங்களை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஸ்டாங் ரூமில் இறக்கி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா, தேர்தல் துணை தாசில்தார் சுகுமார் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
வந்தவாசி: வந்தவாசி தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. இந்த அறைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மது செழியன் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
