தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா முக்கிய ஆலோசனை: எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கருத்து கேட்பு

 

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. கூட்டணியில் இணைந்துள்ள அந்த கட்சியில் எல்.கே.சுதீஷ்க்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேமுதிகவுக்கு வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் எவ்வளவு தொகுதிகளை திமுக ஒதுக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளளது. அதே நேரத்தில் தேமுதிக தரப்பில் இரட்டை இலக்கத்தில், அதாவது 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் இடங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டியிருப்பதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ளச் சொல்லி கூட்டணிக் கட்சிகளை திமுக கோரி வருகிறது. தேமுதிகவிடமும் ஒரு தொகுதியை குறைத்து கொண்டு 9 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமாறு திமுக கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்பி, தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட மாநில நிர்வரிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் பிரசார உத்திகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: